“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

மகிழ்நன் பா.ம

magizh
மகிழ்நன் பா.ம

தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது:

“எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும்

எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல்சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங் பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ, அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்.

ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப்படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கையில்லை. எங்களுக்கு மனு ஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார், அவர்தான் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்கிறார், அவர்தான் கருத்துரிமையை பேசுகிறார். நாங்களும் எங்கள் அரசியல் சாசன உரிமைகளை எதன் பொருட்டும் விட்டு கொடுக்க மாட்டோம்.

ஜே என் யூ ஜிஹாதிக்கள் இருக்கிறார்கள், வன்முறையை பரப்புகிறார்கள் என்று சுவாமி சொல்கிறார். துணிவிருந்தால் ஆர்.எஸ் எஸ் அடிவருடிகளை அழையுங்கள். நான் சவால் விட்டு கேட்கிறோம். ஏபிவிபி தங்களது முழக்கங்களில் ”ரத்தத்தால் திலகமிடுவோம் என்றும், குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்றும் கூறுகிறார்களே? இந்த வெட்கங்கெட்டவர்கள் யாருடைய ரத்தத்தை இந்த ஊரில் ஓட விட பார்க்கிறார்கள்?

ஆம், நீங்கள் குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள். ஆங்கிலேயர்களோடு இணைந்து கொண்டு, இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் மீது குண்டுகளை பாய்ச்சியிருக்கிறீர்கள்.

இந்த ஊரில் ஏழைகள் தங்கள் பசியை குறித்து கவலைப்படுகிறார்கள். பட்டினியில் வாடும் மக்கள் தங்கள் உரிமையை பற்றி பேசுகிறார்கள். நீங்கள் அவர்கள் மேல்தான் உங்கள் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள். இஸ்லாமீயர்கள் மீதும் குண்டுகளை பாய்ச்சுகிறீர்கள்.

பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடினால், ஐந்து விரல்கள் ஒன்று போல இருப்பதில்லை. பெண்கள் சீதையைப் போல இருக்க வேண்டும் என்று அவர்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறீர்கள்.

இந்த நாட்டில் ஜனநாயக நாடுதானே? அது, மாணவர்கள், ஊழியர்கள், ஏழைகள், கூலித்தொழிலாளி மற்றும் விவசாயிகள் ஆனாலும், அம்பானி அல்லது அதானி ஆனாலும் அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கியிருக்கிறதே?

பெண்களின் உரிமைகள் குறித்து பேசும் போது, நம்மை பாரதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறீர்கள் என்று குற்றஞ்சுமத்துகிறார்கள்.

ஆம், நாங்கள் அழிக்க நினைக்கிறோம். சுரண்டல் பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம். சாதிய பண்பாட்டை அழிக்க நினைக்கிறோம். மனுவாத, பார்ப்பனிய பண்பாட்டை அழிக்க விரும்புகிறோம்.

இவர்களுக்கு உண்மையில் எங்கே பிரச்சினை வருகிறது?

மக்கள் ஜனநாயகத்தை குறித்து பேசும் போதும்,

செவ்வணக்கத்தோடு, நீல வணக்கத்தை இணைத்து சொல்லும் போதும்,

மார்க்ஸோடு, அண்ணல் அம்பேத்கரின் பெயரை இணைக்கும் போதும் வருகிறது.

இதை உறுதியோடு செய்யும் போது இவர்கள் வயிற்றில் புளி கரைக்கிறது.

இந்த காவி கும்பல் ஆங்கிலேயர்களின் அடிபொடிகள். முடிந்தால் என் மீது தேசவிரோத வழக்கு தொடுங்கள்.

ஆர்.எஸ்.எஸின் வரலாறு என்பதே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு நின்றதோடுதான் பிணைந்திருக்கிறது.

இந்த தேசத்துரோகிகள்தான் நம்மிடம் தேசபக்திக்கான சான்றிதழை கோருகிறார்கள்.

வேண்டுமென்றால், எனது மொபைலை பரிசோதித்துக் கொள்ளுங்கள் தோழர்களே, என் தாய், சகோதரிகளை பற்றி அசிங்கமான சொற்களில் திட்டி தீர்க்கிறார்கள். பாரத மாதாவை பற்றி பேசுகிறது இந்த கும்பல். உங்கள் பாரத மாதாவில் எனது தாய் இல்லையென்றால், பாரத மாதா மீதே எனக்கு உடன்பாடு கிடையாது.
இந்த நாட்டின் வறுமையில் வாடும் பெண்கள், என் அம்மா அங்கன்வாடியில் 3000 ரூபாய்க்கு கூலி வேலை செய்கிறார். அதில் எங்கள் குடும்பம் நடக்கிறது. இந்த கும்பல் அவருக்கு எதிராக கெட்ட வார்த்தையில் பேசுகிறது. இந்த நாட்டின் மீது வெட்கப்படுகிறேன். இந்த நாட்டின் ஏழை, தலித், விவசாயிகளின்ன் மாதாக்கள் யாரையும் இவர்கள் பாரதமாதாவாக ஏற்றுக் கொள்வதில்லை.

நான் ஜெய் சொல்கிறேன். பாரதத்தின் மாதாக்களுக்கு ஜெய். பிதாக்களுக்கு ஜெய். மாதா, சகோதரிகளுக்கு ஜெய்….விவசாய, ஏழை, தலித், பழங்குடிகளுக்கு ஜெய்…
உங்களுக்கு துணிவிருந்தால் புரட்சி வெல்லட்டும் என்றோ, பகத் சிங் புகழ் ஓங்குக என்றோ, சுக்தேவின் புகழ் ஓங்குக, அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்றோ கூற முடியுமா? அப்பொழுது நம்புகிறோம், காவி கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று…

ஆனால், அம்பேட்கரின் 125 வது பிறந்த நாள் கொண்டாடுவதா நாடகம் ஆடுகின்றீர்கள். சாதியம்தான் இந்த நாடு சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று அண்ணல் அம்பேட்கர் கூறினாரே..உண்மையாக அக்கறை இருக்குமானால், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்களேன். அப்பொழுது நம்புகிறோம், காவி கும்பலுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று…

மக்களுக்கு அப்பால் ஒரு தேசம் இருக்க முடியாது. ஒரு நாடென்ற ஒன்று உருவாக வேண்டுமென்றால், அது மக்களால்தான் உருவாகும்.
நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்தேன், பாசிசம் மெல்ல மெல்ல நம்மை நோக்கி வருகிறது. அது நாளை ஊடகங்களையும் பாம்பு போல சுற்றிக் கொள்ளும். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி போல இப்போதும் நிகழும்.

ஒருவர் சொல்கிறார், எங்கள் வரிப்பணத்தில்தானே கல்லூரி நடக்கிறது. அங்கே எப்படி நீங்கள் என்கிறார்….

பல்கலைக்கழக வளாகம் இருப்பதே எதற்காக? சமூகத்தில் நிலவும் சூழலை குறுக்கு விசாரணை செய்வதற்குதானே…? பல்கலைக்கழகங்கள் இந்த பணியில் தோற்றால், நாடு நல்ல சூழலில் இருக்காது. நாடு, நாடாகவே இருக்காது..அதன் பிறகு நாடென்ற ஒன்று இருந்தால், கோடீஸ்வர கும்பலுக்காகத்தான் இருக்கும்… முழுக்க, முழுக்க சுரண்டல்தான் கலாச்சாரம் என்றாகும். ..

இந்த தேசத்தோடும், அம்பேட்கரும், பகத் சிங்கும் இந்நாட்டின் நலனுக்காக கண்ட கனவுகளோடும் நாங்கள் ஒன்றிப் போனவர்கள். உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலும் சமத்துவத்தை உறுதி செய்யும் கனவுதான் எங்களுடையது. இந்த கனவுக்காகத்தான் ரோஹித் தன்னுடைய உயிரை கொடுத்தான். மத்திய அரசுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். ஐதரபாத்தில் ரோஹித்துக்கு என்ன நடந்தந்தோ, அதை கண்டிப்பாக ஜே.என்.யூவில் நடக்க விட மாட்டோம்.

ரோஹித்தின் தியாகத்திற்கு நாங்கள் எதை திருப்பி தரப் போகிறோம். கருத்துரிமையின் நிலைநாட்டும் போராட்டத்தில் துணிந்து நிற்போம். எங்கள் கோரிக்கை எல்லாம் பாகிஸ்தான், வங்காள தேசம் என்னும் பிரிவினையை கைவிட்டு, ஏழை உலகத் தொழிலாளர்கள் ஒன்று படுங்கள் என்பதுதான். சாதியவாத. முதலாளித்துவ பார்ப்பனிய கூட்டின் கொடூர முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதுதான் நம் முன்னால் இருக்கும் தலையாய பணி. உண்மையான ஜனநாயகத்தையும், உண்மையான சுதந்திரத்தையும், அனைவருக்குமான சுதந்திரத்தை உறுத் செய்ய வேண்டும்.

நம் நாட்டின் ஒற்றுமைகாக இணைந்து நிற்க உறுதியேற்போம் தோழர்களே!

நாட்டை பிளக்கும், தீவிரவாதத்தை ஊட்டி வளர்க்கும் இந்த கும்பலை எதிர்கொள்வோம். இறுதியாக ஒரு கேள்வியை கேட்டு என் உரையை முடிக்கிறேன் தோழர்களே…அப்சல் குரு யார்? அஜ்மல் கசாப் யார்? உடலில் பாம் கட்டிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள தயாரான இவர்கள் யார் என்ற கேள்வி இந்த பல்கலைக்கழகத்தில் எழவில்லையென்றால், இந்த பல்கலைக்கழகம் இருந்தே பயனில்லை.

வன்முறைக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லையென்றால், வன்முறையை நாம் எப்படி புரிந்து கொள்ள முடியும்? துப்பாக்கி தூக்கிக் கொண்டு ஒருவரை கொல்வது மட்டுமே வன்முறையாகிவிடாது. தலித் மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை வழங்க மாட்டோம் என்று ஜே.என்.யூவில் சொல்வது கூட வன்முறைதான். இது நிறுவனரீதியான வன்முறை இல்லையா?

நீதியை பற்றி பேசுகிறார்கள்? யார் முடிவு செய்வது? எது நீதியென்று? பார்ப்பன மேலாண்மையில் பஞ்சமர்கள் கோவிலில் நுழைய அனுமதி இல்லாதிருந்தது. அதுதானே அன்று நீதி என்று கருதப்பட்டது. ஆங்கிலேயர்கள் இருந்த போது இந்தியர்களுக்கும், நாய்களுக்கு ஹோட்டல்களில் அனுமதி இல்லை என்று எழுதி வைத்திருந்தார்கள். அதுவும் அன்று நீதி எனப்பட்டது. அன்று நாங்கல் அந்த நீதியை எதிர்த்தோம். இன்றும், ஆர்.எஸ்.எஸ் – ஏபிவிபியின் நீதியை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

உங்கள் நீதி எங்கள் நீதியை உள்ளடக்க மறுக்குமானால், உங்கள் நீதியையும், சுதந்திரத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களுக்கு அரசியல்சாசனம் உறுதி செய்திருக்கின்ற உரிமைகள் என்று கிடைக்கிறதோ, அன்றுதான் நாங்கள் இந்த சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வோம். அனைவருக்கும் சமத்துவம் உறுதி செய்யப்படும் போதுதான் நீதிபரிபாலனையை ஏற்றுக் கொள்வோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.